இந்தியாவில் ஐ.எஸ்.எல்., தொடரின் ஆறாவது சீசன் நடந்தது. கோவாவின் படோர்டா மைதானத்தில் நடந்த பைனலில் தலா இரு முறை கோப்பை வென்ற அணிகளான சென்னை, கோல்கட்டா பலப்பரீட்சை நடத்தின.
4வது நிமிடத்தில் சென்னை வீரர் வால்ஸ்கிஸ் கோல் அடிக்க கிடைத்த எளிதான வாய்ப்பை கோட்டை விட்டார். இவர் அடித்த பந்து கோல் போஸ்டில் பட்டுத் திரும்பியது. 11வது நிமிடம் கோல்கட்டா வீரர் ராய் கிருஷ்ணா கொடுத்த பந்தை பெற்ற ஜாவி ஹெர்னாண்டஸ், இடது காலால் அடித்து கோலாக மாற்றினார்.
27, 28வது நிமிடங்களில் வால்ஸ்கிஸ் எடுத்த கோல் முயற்சிகள் வீணாகின. 30வது நிமிடம் கிடைத்த ‘பிரீ கிக்’ வாய்ப்பில் ஸ்கீம்ரி தலையால் அடித்த பந்தை கோல் கீப்பர் தடுத்தார். சென்னை அணியின் அடுத்தடுத்த முயற்சிகள் வீணாக, முதல் பாதியில் 0–1 என பின்தங்கியது.
வால்ஸ்கிஸ் ஆறுதல்
இரண்டாவது துவங்கிய 3வது நிமிடம் கோல்கட்டா வீரர் கார்சியா ஒரு கோல் அடிக்க, கோல்கட்டா 2–0 என முந்தியது. 69 வது நிமிடம் ஜெர்ரி கொடுத்த பந்தை வாங்கிய வால்ஸ்கிஸ், கோல் அடித்து நம்பிக்கை தந்தார்.
கடைசி நிமிடத்தில் கோல்கட்டாவின் ஜாவி (90+3வது) மற்றொரு கோல் அடித்தார். முடிவில் கோல்கட்டா அணி 3–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. 2014, 2016க்குப் பின் மூன்றாவது முறையாக (2020) கோல்கட்டா கோப்பை வென்றது.
ரசிகர்களுக்கு ‘நோ’
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் அனைத்து போட்டித் தொடர்களும் தள்ளி வைக்கப்பட்டன. ஐ.எஸ்.எல்., தொடரின் பைனல் மட்டும் நேற்று நடந்தது. மத்திய சுகாதாரத்துறை ‘அட்வைஸ்’ படி, ரசிகர்கள் யாரும் போட்டியை காண அனுமதிக்கப்படவில்லை.
0 comments:
Post a Comment